கண்கள் கலந்திருக்க
காதல் பிறந்திருக்க
கிள்ளை மகிழ்ந்திருக்க
கீதம் இசைத்திருக்க
குடும்பம் அறிந்துவிட
கூத்து முடிந்துவிட
கெட்டி முழங்கிவிட
கேள்வியற்று மகிழ்திருக்க
கையில் மழலை கிடைத்துவிட – காதல்
கொள்கையில் விரிசல்விழ – வாழ்க்கை
கோலம் புரிந்துவர – தலைவன்
கௌதமர் நிலையில் மௌனித்தான்
படைக்கும் பிரமன்
நான் என்றால்
பாவையரை படைக்கமாட்டேன்
படைக்கும் நிலை வந்திருப்பின்
பாவையரின் மனம் கண்டறியும்
மந்திரக்கோலை
பாவம் ஆண்களிடம்
கொடுத்திருப்பேன்
குழந்தை இவன் சிரிப்பினிலே
கோடி செல்வம் குவியும்
குண்டுக் கன்னம் தொடுகையிலே
கோடி இன்பம் தோன்றும்
கள்ளன் இவன் தவழ்கையிலே
கண்ணன் அவன் நினைவு வரும்
கள்ளச் சிரிப்பினிலே
கவிதை பல தானே வரும்
மழலை இவன் இல்லையெனில்
மங்கைக்கோ வாசம் இல்லை
மண்ணில் உள்ள செல்வங்களில்
மகிழ்ச்சி தரும் செல்லம் இவன்
செல்லம் இவன் இல்லையெனில்
செல்லுமிடத்தில் உயர்வு இல்லை
செல்வம் தேடும் மானிடமே முதலில்
செல்லம் இவனை தேடிடுங்கள்
செல்வமது தேடிவரும்
கட்டழகுப் பெட்டகம் - இவள்
கன்னியென்னும் புத்தகம் - இவள்
கடந்து செல்லும் யுகங்களிலும் - அவனுக்கு
கசந்திடாத சித்திரம் இவள்………
வையத்து பால் நிலவோ
கானகத்து மானினமோ
களிபூட்டும் மெல்லினமோ
கள்ளி நீ
எவ்விடத்து ராட்சசியோ
என்னைக் கொல்லாமல்
சொல்………….
மாரனவன் விட்ட அம்பு
மனதில் பட்டதினால்
மாது இவள் மாறிவிட்டாள்
மனதை கொடுத்துவிட்டாள்
மென்னிசையில் சுரமெடுத்து
மெல்லினத்தாள் இதழ் விரித்து
மீட்டுகின்றாள்
மெதுவா மெதுவா
ஓர் காதல் பாட்டு
கண்ணதில் தொடங்கும் பாடம்
கனமது இதயத்தில் ஏறும்
மனமதில் மனனம் ஆகும்
இதழ்களில் ஐனனம் ஆகும்
இதுவே காதலாகும்
மேல் இமையாய் நான் - இருக்க
கீழ் இமையாய் நீ - இருக்க
கண்கள் தூங்கி விட்டால் என்ன
நாம் இணைந்திருக்க…………..
இருவிழி நுழைந்த காதல்
இதழ் வழி வருதல் வேண்டும்
இதழ் வழி வராத காதல்
இருவிழி நுழைந்தென்ன
இதயத்தில் இருந்தென்ன………..
இருவிழி நுழைந்து
இதயத்தில் கலந்து
இனி நீயே என் உயிர் என்ற
இனியவளே....
இனியவனே
எனது கணவன்
என்று சொல்லி சென்றதேன்
இதயத்தில் உன்னை எழுதி வைத்தேன்
இருவிழியில் உன்னை பதிய வைத்தேன்
உதடுகளில் உன்னை உறைய வைத்தேன்
உருவத்தை என்னுள் பதுக்கி வைத்தேன்
இப்படி வைத்திருந்த என்னால்
இதழ்வழி காதலைச் சொல்ல
இறுதிவரை துணிவு இல்லை
விழி வீசினாள்
அவள்
விருந்தானன்
அவன்
கொடுத்தான்
அவன்
எடுத்தாள்
அவள்
எதை ?
இதயத்தை
உயிரை
வாழ்வை
இன்று வரை
எத்தனை ஜோடி
கண்களை கண்டிருப்பேன்
இவள்
கண்கள் மட்டும்
ஏன் இப்படி ?
என்னை
சொல்லாமல்
கொல்கின்றது
உணவில் வெறுப்பு
உள்ளத்தில் தவிப்பு
நித்திரை துறப்பு
நினைத்தவை மறப்பு
இத்தனையும் இருப்பின்
மாத்திரைக்கு கட்டுப்படா
மனதுக்குள் புகுந்துவிட்ட
காதல் வைரஸ் பெருகியதன்
அறிகுறியாம்
வைரஸ் இது அழியாது
அமிழ்ந்து போக
மாத்திரை இல்லை
மார்க்கம் உண்டு
இதயத்தில் உள்ளதை
இதழ்வழி எடுத்துவிடு
வார்த்தை வாந்தியாக…..
மனதில் வைத்து பூஜித்து
மௌனமாய் அவளை நேசித்து
கண்ணில் காதல் வாசித்து
கவியாய் அதை பதியவைத்துள்ள
அவன்
மங்கை அருகாக
மனது ஊமையாக
மௌனம் மொழியாக
மயங்குவது ஏன்?
மனதில் உள்ள காதலை
மறைக்காமல் சொல் - இல்லை
மறந்து உன் வழிசெல்
பாதை வழிபோனவள்
பார்வை வீசிப்போனாள்
பாவம் இவன்
விழியசைவு பார்த்து
வழியசைவு மறந்துவிட்டான்
காதல் என்பது மூன்றெழுத்து
காதலர்க்கு இதிலே மூச்சிருக்கு
கா என்பது காத்திருப்பு
த என்பது தவித்திருப்பு
ல் என்பது லயித்திருப்பு
மூன்றிருப்பிலும் வெற்றியெனின்
கிடைப்பதோ மணத்திறப்பு
சாலை தோறும் காத்துள்ளான்
அவள் காதலுக்காக
சாகும்வரை தொடருமென்று
அவனுக்கு தெரியாமல்
ஓரு நாள்
நிலத்தை
கொண்டுவிட கடல்
யுகம் யுமாய் காத்தருப்பதுபோல்
நானும் காத்துள்ளேன் - நீ
சொல்லும் - ஓர்
சொல்லுக்காக
இதயம் இரண்டு இடம் மாறுது
இதயத்தில் ஏதோ தடம் மாறுது
கண்கள் இரண்டு கவிபாடுது – காதல்
காவியம் எழுத கருவாகுது
பெண்மை இங்கு ருதுவாகுது
பேசா ஓவியம் போலாகுது
திண்மை இங்கு தீயானது
தீண்ட தீண்ட மேலாகுது
நாம் இங்கு உருவாகுது – அதனால்
நல்லது கெட்டதில் சேர்ந்தாடுது
விந்தை தேடும் மானிடமே - இதற்கு
விஞ்ஞானத்தில் விளக்கம் சொலலுங்களே
உன்
செவ்வாய் கண்டு
மெய்வாய் பேச மறந்து
தன்
நிலவாய் உன்னை நினைந்து
பெய்வாய் அன்புமழை என நினைக்க
நீயோ சொல்லாமல்
செல்வாய் அதனால் அவனைக்
கொல்வாய் இதனால் நீ அவனை
வெல்வாயா பெண்ணே ....
மனதே மனதே வருந்தாதே
மாலவன் துணையுண்டு மயங்காதே
இனியும் தடையென்று நினையாதே
இனி நல்ல வழியுண்டு மறக்காதே
தோல்வியை கண்டு துவளாதே
தோன்றியது வீண் என்று எண்ணாதே – நீ
தோப்பில்லா மரமென்று நினைக்காதே – அவனை
தோத்திரம் செய்வதை நிறுத்தாதே
மன்மதன் அழகு அவன் மேனி
மழலையின் சிரிப்பு அவன் இதழில்
கருணையின் வெள்ளம் அவன் கண்கள்
கலைகளின் மூலம் அவன் கழல்கள்
கண்ணன் என்பது அவன் பெயராம்
கருணை என்பது அவன் ஊராம்
எம்மவன் கண்ணணை நாடுங்கள்
எல்லா சுகங்களும் நல்கிடுவான்
கள்ளம் இல்லா வெள்ளை உள்ளம்
கள்ளன் வேண்டும் கருணை உள்ளம்
கண்களிரண்டும் அவன் கழல்கள்
காணும் நாளே திருநாளாம்
புத்தம் புதிய பூமியிதை
பூக்களால் நிரப்பி
பக்தர்கள் உங்களுக்கு
பரமனவன் தந்துள்ளான்
பித்தம் பிடித்து நீங்கள் - பாரை
பிய்த்தெறிய நினைக்காமல்
பக்குவமாய் வைத்திருங்கள்
பரம்பரைக்கு உதவிடுமே !
சத்தமது ஏதுமின்றி
சந்தோசமதை நிரப்பி
சலசலக்கும் அருவியோடு
சந்தனத்து மணம் பரப்பி
வித்தை பல மண்ணில் வைத்து
விருந்து போல பழங்கள் வைதது
கடல் நிறைய மீனை வைத்து
கரைக்கு வரும் அலையை படைத்து
எல்லையில்லா நிலம் கொடுத்து
எதுவும் விளையும் மண் கொடுத்து
வளரும் பசுமை பல கொடுத்து
வளர்த்துவிட மழை கொடுத்து
சிரிக்கும் குணம் கொடுத்து
சிந்திக்கும் மனிதராக உனைபடைத்து
விருப்பம் போல பூமியிதை
விண்ணால் மூடி தந்துள்ளான்
மனிதரென்னும் ஆறறிவே !
மனிதம் கொன்று மண்ணை கொல்லாமல்
பக்குவமாய் வைத்திருங்கள்
பரம்பரைக்கு உதவிடுமே !
உயிர் வாழ விட்ட மண்ணை
உரசிப்பார்க்க நினைக்கின்றாய்
எல்லையற்று தந்த மண்ணை
எல்லை போட்டு கூறுபோட்டாய்
வனத்தோடு தந்த மண்ணை
வாழவென்று வெட்டிவிட்டாய்
கடலோடு தந்த மண்ணை
கழிவுநீர் திருப்பிவிட்டாய்
நீருக்காய் தோண்டிய மண்ணில்
நிதமும் செல்வம் எடுக்கின்றாய்
விண்ணை சுற்றி தந்த மண்ணை
விண்ணை அறிவதாக துளைத்துவிட்டாய்
விஞ்ஞானத்தால் வெல்வதாக மண்ணை
விண்ணோடு நஞ்சை கலந்துவிட்டாய்
இத்தனையும் போதாதேன்று மண்ணில உன்
இனத்தவரை உயிரோடு; புதைத்தாய்
இத்தனை நீ செய்தும் இயற்கை உன்னிடம்
இரக்கமாய் இருப்பதெல்லாம்
இனிவரும் பரம்பரைக்காக
அதனால் மண்ணை
பக்குவமாய் வைத்திருங்கள்
பரம்பரைக்கு உதவிடுமே !
மனிதா!
உன்னை
எச்சரிக்கை செய்யத்தான்
எரிமலை முதல் சுனாமி வரை
அச்சுறுத்தல் பாடங்கள்
அதற்கும் நீ அசைந்ததாக தெரியவில்லை
ஒன்றை மட்டும் நினைவில் வை
உன்னை விட இயற்கை
உயர்ந்தது என்பதும்
அது நினைத்துவிட்டால்
ஒரு நிமிடம் போதும்
எல்லாம் முடிக்க
ஆதலால்
இன்றே முடிவெடு
இயற்கையோடு வாழ்ந்திடு
இனிதே நலம்பெற்று
இனி வரும் பரம்பரைக்கு
இயற்கையை
பக்குவமாய் வைத்திரு
பரம்பரைக்கு உதவிடுமே !