புத்தம் புதிய பூமியிதை
பூக்களால் நிரப்பி
பக்தர்கள் உங்களுக்கு
பரமனவன் தந்துள்ளான்
பித்தம் பிடித்து நீங்கள் - பாரை
பிய்த்தெறிய நினைக்காமல்
பக்குவமாய் வைத்திருங்கள்
பரம்பரைக்கு உதவிடுமே !

சத்தமது ஏதுமின்றி
சந்தோசமதை நிரப்பி
சலசலக்கும் அருவியோடு
சந்தனத்து மணம் பரப்பி
வித்தை பல மண்ணில் வைத்து
விருந்து போல பழங்கள் வைதது
கடல் நிறைய மீனை வைத்து
கரைக்கு வரும் அலையை படைத்து
எல்லையில்லா நிலம் கொடுத்து
எதுவும் விளையும் மண் கொடுத்து
வளரும் பசுமை பல கொடுத்து
வளர்த்துவிட மழை கொடுத்து
சிரிக்கும் குணம் கொடுத்து
சிந்திக்கும் மனிதராக உனைபடைத்து
விருப்பம் போல பூமியிதை
விண்ணால் மூடி தந்துள்ளான்
மனிதரென்னும் ஆறறிவே !
மனிதம் கொன்று மண்ணை கொல்லாமல்
பக்குவமாய் வைத்திருங்கள்
பரம்பரைக்கு உதவிடுமே !

உயிர் வாழ விட்ட மண்ணை
உரசிப்பார்க்க நினைக்கின்றாய்
எல்லையற்று தந்த மண்ணை
எல்லை போட்டு கூறுபோட்டாய்
வனத்தோடு தந்த மண்ணை
வாழவென்று வெட்டிவிட்டாய்
கடலோடு தந்த மண்ணை
கழிவுநீர் திருப்பிவிட்டாய்
நீருக்காய் தோண்டிய மண்ணில்
நிதமும் செல்வம் எடுக்கின்றாய்
விண்ணை சுற்றி தந்த மண்ணை
விண்ணை அறிவதாக துளைத்துவிட்டாய்
விஞ்ஞானத்தால் வெல்வதாக மண்ணை
விண்ணோடு நஞ்சை கலந்துவிட்டாய்
இத்தனையும் போதாதேன்று மண்ணில உன்
இனத்தவரை உயிரோடு; புதைத்தாய்
இத்தனை நீ செய்தும் இயற்கை உன்னிடம்
இரக்கமாய் இருப்பதெல்லாம்
இனிவரும் பரம்பரைக்காக
அதனால் மண்ணை
பக்குவமாய் வைத்திருங்கள்
பரம்பரைக்கு உதவிடுமே !

மனிதா!
உன்னை
எச்சரிக்கை செய்யத்தான்
எரிமலை முதல் சுனாமி வரை
அச்சுறுத்தல் பாடங்கள்
அதற்கும் நீ அசைந்ததாக தெரியவில்லை
ஒன்றை மட்டும் நினைவில் வை
உன்னை விட இயற்கை
உயர்ந்தது என்பதும்
அது நினைத்துவிட்டால்
ஒரு நிமிடம் போதும்
எல்லாம் முடிக்க
ஆதலால்
இன்றே முடிவெடு
இயற்கையோடு வாழ்ந்திடு
இனிதே நலம்பெற்று
இனி வரும் பரம்பரைக்கு
இயற்கையை
பக்குவமாய் வைத்திரு
பரம்பரைக்கு உதவிடுமே !

Followers